This Article is From Jun 23, 2020

டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் மாணவி சபூரா சர்காருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்!!

மனித உரிமை அடிப்படையில் சபூராவுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து அவருக்கு ஜாமீன் அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் மாணவி சபூரா சர்காருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்!!

சபூரா சிறை வைக்கப்பட்டிருந்தது குறித்து பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

ஹைலைட்ஸ்

  • டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் சபூரா சர்காருக்கு ஜாமீன்
  • நிபந்தனைகளுடன் ஜாமீன் அளித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
  • ஜாமீன் வழங்குவது தொடர்பான விசாரணையில் அரசுதரப்பு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை
New Delhi:

டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் மாணவி சபூரா சர்காருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவியான அவர், கர்ப்பிணியாக இருந்தார். அவர் சிறையில் வைக்கப்பட்டிருந்தது குறித்து பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் மாணவி சபூரா சர்காருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

ஜாமீன் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனித உரிமை அடிப்படையில் அதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. 

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன.  இந்த நிலையில்,  கடந்த பிப்ரவரி மாதம் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது இருதரப்புக்கு இடையே வன்முறை வெடித்தது. 

இதில் மாணவி சபூரா சர்கார் யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  

சபூரா, டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் படித்து வரும் மாணவி. அவர், 6 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில்,  ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது குறித்து பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்துள்ளது.  விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அரசின் அனுமதியின்றி அவர் டெல்லியை விட்டு வெளியேற கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு விதித்துள்ளது. 

விசாரணை அதிகாரியுடன் சபூரா சர்கார் போனில் தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

.