This Article is From Jul 02, 2020

‘இனி எந்த குடும்பத்துக்கும் இது நடக்கக் கூடாது!’- ஜெயராஜ் மகள் பெர்சி உருக்கம்

சிபிஐ இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

‘இனி எந்த குடும்பத்துக்கும் இது நடக்கக் கூடாது!’- ஜெயராஜ் மகள் பெர்சி உருக்கம்

சிபிஐ வழக்கை எடுக்கும் முன்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

ஹைலைட்ஸ்

  • சாத்தான்குளம் சம்பவம் இந்தியளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன
  • இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
  • காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

தூத்துக்குடியின் சாத்தான்குளத்தில் காவலர்களின் பிடியில் இருந்தபோது உயிரிழந்த தந்தை மகனான, ஜெயராஜ் - பென்னிக்ஸ் விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பெண் காவலர் ஒருவர் அளித்துள்ள சாட்சியத்தால், வழக்கு விசாரணையில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் ஜெயராஜின் மகள் பெர்சி, “இதுவரை இந்த வழக்கில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை திருப்தியளிக்கிறது. அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளுக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். தகுந்த நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி. இந்தப் பிரச்னையைத் தங்கள் சொந்த குடும்பப் பிரச்னையாக எண்ணி குரல் கொடுத்து வரும் அனைவருக்கும் மிக்க நன்றி. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பலரும் இது குறித்து குரல் கொடுத்து வருகிறார்கள். அனைவருக்கும் மிக்க நன்றி. இனி யாருக்கும், எந்த குடும்பத்துக்கும் இதைப் போன்ற ஒரு அநீதி ஏற்பட்டுவிடக் கூடாது. அதற்கு ஏற்றது போல நீதிமன்றமும், அரசு தரப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 19 ஆம் தேதி, தூத்துக்குடியின் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மீறி, தங்களின் கடையை சுமார் 15 நிமிடம் கூடுதலாக திறந்து வைத்தனர் என்று குற்றம் சாட்டி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை காவல் துறை கைது செய்தது. போலீஸ் தரப்பு, ‘ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களை அவர்கள் மிரட்டவும் செய்தனர். சாலையில் படுத்து உருண்டதால் அவர்களின் உடலில் காயம் ஏற்பட்டது,' என்று கூறியிருந்தது. 

காவல் துறையால் கைது செய்யப்பட்ட இருவரும் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது. உடலில் உள்ளேயும் வெளியேயும் காயங்கள் இருந்ததாக சொல்லும் ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர், பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய் பகுதிகளிலும் ரத்தம் வடிந்ததாக அதிர்ச்சிப் புகார்களை சுமத்தியுள்ளனர். 

ஜூன் 22 ஆம் தேதி பென்னிக்ஸ், மருத்துவமனையில் இறந்துவிட, அவரின் தந்தை அடுத்த நாள் காலமானார். இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு, சிபிஐ-யிடம் ஒப்படைத்துள்ளது.

முன்னதாக வழக்கு குறித்து நீதிமன்ற மாஜிஸ்திரேட் விசாரணையின்போது கான்ஸ்டபிள் மகாராஜன், “நீங்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது,” என்று மிரட்டியுள்ளதாக நீதிமன்றத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதை சுட்டிக்காட்டி நீதிமன்றம், துணை எஸ்.பி சி.பிராதபன், கூடுதல் துணை எஸ்.பி டி.குமார் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் மகாராஜன் மீது நீதிமன்ற அவமதிப்புக்கு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. மேலும் நீதிமன்றம், ‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்வதற்கு முகாந்திரம் உள்ளது,' என்று கறாராக குறிப்பிட்டுள்ளது. 

சிபிஐ இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சிபிஐ வழக்கை எடுக்கும் முன்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு வந்த சிபிசிஐடி போலீசார், நேற்று முதல் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனைத்து போலீசாரையும் கைது செய்துள்ளனர். இதில், 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கை பதிவு செய்துள்ளனர்.

.