This Article is From Dec 30, 2018

‘ஐயா எனக்கும் ஒண்ணும் தெரியாது!’- பத்திரிகையாளர் சந்திப்பில் பொங்கிய சத்யராஜ்

கருத்து சொல்லியேயாக வேண்டும் என்று நின்றால், என்னால் என்ன சொல்ல முடியும்’ என்று பதில் கேள்வி எழுப்பினார்

‘ஐயா எனக்கும் ஒண்ணும் தெரியாது!’- பத்திரிகையாளர் சந்திப்பில் பொங்கிய சத்யராஜ்

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜை சுற்றி வளைத்துப் பத்திரிகையாளர்கள் கேள்விகளால் துளைத்தெடுத்தனர். ஒரு கட்டத்தில் அவர், ‘ஐயா எனக்கு ஒண்ணும் தெரியாது. தெரியாத விஷயத்தை நீங்க சொல்லியே ஆகணும்னு நின்னா நான் என்ன செய்ய முடியும்' என்று பொங்கியுள்ளார்.

நிகழ்ச்சி முடிந்து மேடையை விட்டு இறங்கி வந்த சத்யராஜை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது, ‘ராஜீவ் காந்தி வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் அந்தக் குற்றத்தைப் புரிந்திருக்கிறார்களா, இல்லையா என்பது கேள்வியல்ல. எப்படிப் பார்த்தாலும் குற்றத்திற்கு அதிகமான காலத்தை சிறையில் அவர்கள் கழித்துள்ளனர். எனவே அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு' என்றார்,

அப்போது ஒரு பத்திரிகையாளர், ‘இதில் ஆளுநர் செயல்பாடு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?' என்றார். அதற்கு சத்யராஜ், ‘எனக்கு இந்த வழக்கு குறித்த சட்ட நுணுக்கங்கள் தெரியாது. அது குறித்து என்னால் எந்த வித கருத்தும் சொல்ல முடியாது' என்று முடித்தார்.

தொடர்ந்து அது குறித்தே கேள்வி எழுப்பப்பட்டது, இதனால் ஒரு கட்டத்தில் சத்யராஜ், ‘ஐயா, எனக்கு அது பற்றி எதுவுமே தெரியாது என்கிறேன். ஆனால், கருத்து சொல்லியேயாக வேண்டும் என்று நின்றால், என்னால் என்ன சொல்ல முடியும்' என்று பதில் கேள்வி எழுப்பினார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நடையைக் கட்டினார்.

.