சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் கொலை தனது கண்காணிப்பின் கீழ் நடந்ததாக சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார். கொலை நடந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் சல்மானின் தகவல் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் பத்திரிகையாளர் ஜமால் கசோகி. இவர், அந்நாட்டு அரசை விமர்சித்து பத்திரிகை மற்றும் இணைய தளங்களில் எழுதி வந்தார். இதனால் அவருக்கு அச்சுறுத்தல்கள் வந்ததை தொடர்ந்து சொந்த நாடானா சவுதியில் இருந்து அமெரிக்காவில் குடி பெயர்ந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின்போது தனது காதலியை திருமணம் செய்வது தொடர்பான ஆவணங்களைப் பெற கசோக்கி துருக்கி நாட்டுக்கு சென்றிருந்தார். கடைசியாக அக்டோபர் 13-ம்தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்பூலில் உள்ள சவுதி தூதரகத்தில் அவர் காணப்பட்டார். அதன்பின்னர் அவர் எங்கிருக்கிறார், என்னவானார் என்பது குறித்து விவரம் ஏதும் தெரியவில்லை.
இதற்கிடையே, அவரை சவுதி இளவரசர் தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கொலை செய்து விட்டதாக தகவல்கள் வெளியானது. மர்மமான முறையில் இந்த சம்பவம் நடந்திருந்ததால் உலகம் முழுவதும் இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் சி.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஃப்ரன்ட்லைன் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், கசோக்கியின் கொலை தனது கண்காணிப்பின்கீழ் நடந்ததாக சவுதி இளவரசர் சல்மான் கூறியுள்ளார்.
கசோக்கியின் கொலை நடந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில், அதுதொடர்பாக ஆவணப்படத்தை ஃப்ரன்ட்லைன் நிறுவனம் அக்டோபர் 1-ம்தேதி வெளியிடவுள்ளது. அதற்கான ப்ரோமோவில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)