This Article is From May 15, 2020

பணம் கொடுக்க முடியாது, கடன் வாங்கிக் கொள் என்று சொல்வதா? நிதியமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி

பேரிடர் நேரத்திலும் வழக்கம் போல் பகட்டு அறிவிப்புகளை வெளியிட்டு பாலிடிக்ஸ் செய்வதைத் தயவு செய்து தவிர்க்க வேண்டும்.

பணம் கொடுக்க முடியாது, கடன் வாங்கிக் கொள் என்று சொல்வதா? நிதியமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி

பணம் கொடுக்க முடியாது, கடன் வாங்கிக் கொள் என்று சொல்வதா? நிதியமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி

நீண்ட நேரச் பேச்சுக்குப் பதிலாக ஒரே கையெழுத்தில் கருணை காட்டிட ஏன் நிதியமைச்சர் முன்வரவில்லை? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, ''கோவிட்-19 ஊரடங்கின் பாதிப்பு இன்னும் எத்தனை மாதங்களுக்கு என்ற தூரமும், திசையும், எல்லையும் அறியாத துயரத்திலும், திகைப்பிலும் இருக்கும் நமது விவசாயிகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், தெருவோர வியாபாரிகளுக்கும், உடனடியாகப் பயனளிக்கும் ஆக்கபூர்வமான நிவாரணங்களைக் கொடுக்காமல் - அலங்காரப் பேச்சுகள் மூலம் ஏமாற்றி விடலாம் என்று இன்னமும் கூட மத்திய பாஜக அரசு நினைத்துக் கொண்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

20 லட்சம் கோடி நிவாரணம் என்ற பாஜகவின் அரசியலுக்கான தலைப்புச் செய்தி - ஏழை எளிய மக்களுக்கு ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதைப் பிரதிபலிக்கும் வகையிலேயே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இரண்டாவது நாள் அறிவிப்பும் இருக்கிறது.

இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியான திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டு வரும், 5000 ரூபாய் நிதியுதவியையோ அல்லது அகில இந்திய காங்கிரஸ் வலியுறுத்தியுள்ள 7500 ரூபாய் நிதியுதவியையோ பணமாக, நேரடியாக, உடனடியாக வழங்க மனமின்றி - குறிப்பாக விவசாயிகளுக்கு மேலும் கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

அதேபோல் நடைபாதை வியாபாரிகளுக்குப் பத்தாயிரம் ரூபாய் கடனாம். அதுவும் வறுமை பற்றி எரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் - வாழ்வாதாரம் கண்ணுக்கு எட்டும் தொலைவில் இல்லாத நிலையில், இன்னும் ஒரு மாதம் கழித்து அந்தத் திட்டம் வருமாம். வீடு தீப்பிடித்து எரியும்போது, உடனடியாகக் கிடைக்கும் தண்ணீரையும், மண்ணையும் வாரி இறைத்து அணைத்திட முயற்சிப்பதைப் போன்றது, பணமாகக் கொடுக்கப்படும் நிவாரண உதவி.

தீ பற்றி எரியட்டும்; அவசரப்பட வேண்டாம்; தீயணைப்பு நிலையத்திற்குச் செய்தி அனுப்பி இருக்கிறோம், அங்கிருந்து வண்டி வரட்டும், பொறுத்திருங்கள் என்று சொல்வதைப் போல இருக்கின்றன மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகள்.

நிதி அமைச்சரின் இந்த நீண்ட நேரச் சொற்பொழிவுக்குப் பதிலாக; கலைஞர் 7000 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்தது போல் - திமுக பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 60 ஆயிரம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்தது போல் - ஒரே கையெழுத்தில், இந்திய விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்து - மீளாத் துயரில் மூழ்கிக் கிடக்கும் அவர்களைக் கைதூக்கிக் கருணை காட்டிட ஏன் நிதியமைச்சர் முன்வரவில்லை?

பேரிடர் நேரத்திலும் வழக்கம் போல் பகட்டு அறிவிப்புகளை வெளியிட்டு பாலிடிக்ஸ் செய்வதைத் தயவு செய்து தவிர்த்து விட்டு, கோவிட்-19 துயரில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் ஏழை எளிய நடுத்தரப் பிரிவு மக்களைக் காப்பாற்றும் நேரடி நிதியுதவி நடவடிக்கைகளில் மத்திய நிதியமைச்சர், மேலும் தாமதிக்காமல் ஈடுபட வேண்டும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இரு மாதங்களுக்கு ரேஷன் வழங்குகிறோம் என்றால் என்ன பொருள்? உடனடியாகப் பசிப்பிணி தீர்க்கும் இந்தியாதான் இன்றைய அவசரத் தேவையே தவிர, ‘மேக் இன் இந்தியாவோ', ‘ஸ்டேண்ட் அப்' இந்தியாவோ அல்ல.

சட்டப்படியான கடமையை நிறைவேற்றுவதை - நிவாரணமாக அறிவிப்பதற்குப் பதில் - ஏன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் நேரடியாகப் பண உதவி செய்து - அவர்களை மன அழுத்தத்திலிருந்தும் - வறுமையின் கோரப் பிடியிலிருந்தும், வாட்டி வதைத்திடும் ஏழ்மையிலிருந்தும் வெளியே கொண்டு வரக்கூடாது?

அதைவிடுத்து பணம் கொடுக்க முடியாது, இந்தா கடன் வாங்கிக் கொள் என்று சொல்வது, குறைந்தது ஐம்பது சதவிகித இந்தியர்களுக்கு எந்த வகையிலும் உதவாது என்று அவர் தெரிவித்துள்ளார். 

.