This Article is From Nov 01, 2019

Ayodhya வழக்கு பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளவர் என்ன சொல்கிறார்?

Ayodhya Case - தினசரி வழக்கு விசாரணையாக கடந்த ஆகஸ்ட் 6-ம்தேதி முதல் அயோத்தி வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் விசாரணை நிறைவு பெற்றது.

Ayodhya Case - அடுத்த சில நாட்களில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

New Delhi:

வரும் நவம்பர் மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள நீதிபதி எஸ்.ஏ.போப்டே (SA Bobde), அயோத்தி வழக்கு (Ayodhya case) பற்றி NDTV-யிடம் கருத்து கூறியுள்ளார். அயோத்தி வழக்கு, உலகின் மிக முக்கிய வழக்குகளில் ஒன்று என்று அவர் விவரித்துள்ளார். அயோத்தி வழக்கை விசாரித்த 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில், நீதிபதி போப்டேவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நவம்பர் 17 ஆம் தேதியுடன் தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாய், பணி ஓய்வு பெறுகிறார். அதற்குள் அயோத்தி விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து NDTV-யிடம் பேசிய போப்டே, “அயோத்தி வழக்கு மிகவும் முக்கியமானது. உலகின் மிக முக்கிய வழக்குகளில் அதுவும் ஒன்று,” என்றுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த இடம் ராமர் பிறந்த இடம் என்று ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினர் நம்பி வருகின்றனர். இந்த இடத்தில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. 

மொத்தம் 2.77 ஏக்கர் நிலத்திற்குத்தான் சுமார் 28 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. இந்த வழக்கை முதலில் விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தனது தீர்ப்பை வழங்கியது. இதன்படி, வழக்குத் தொடர்ந்த வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகள் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. 
 

இதனை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தில் 14 பேர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. பிரச்சையை சமரசம் மூலம் தீர்த்து வைக்க உச்ச நீதிமன்றம் முயற்சி மேற்கொண்டது.

இதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோர் நடுவர்களாக இருந்து பிரச்னையை சுமுகமாக தீர்க்க முயற்சி எடுத்தனர். அவர்களிடம் பிரச்சனைக்கு உரிய நபர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தார்கள்.

இதன்பின்னர் நடுவர் குழு சார்பாக, இவற்றையெல்லாம் செய்தால் பிரச்னையை சுமுகமாக முடிவுக்கு கொண்டு வரலாம் என்பது குறித்து, அறிக்கை ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்பின்னரும் முடிவு எட்டப்பவில்லை.

இதையடுத்து தினசரி வழக்கு விசாரணையாக கடந்த ஆகஸ்ட் 6-ம்தேதி முதல் அயோத்தி வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் விசாரணை நிறைவு பெற்றது. அடுத்த சில நாட்களில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

.