சென்னை மற்றும் வட தமிழகத்தில் நேற்று கனமழை பெய்தது. இன்றும் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், 7 மாவட்டங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர், இன்று மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார். சென்னைப் பல்கலைக்கழகம், இன்று நடத்தவிருந்த தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது.
இது குறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை மற்றும் அதன் சுற்றுப் புற மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால், 22 நவம்பர் அன்று நடத்தவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. தேர்வு தேதிகள் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், ‘அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என்று தகவல் தெரிவித்துள்ளது. சென்னையைத் தவிர்த்து, விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் நேற்று நல்ல மழை பெய்தது.
கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்து நிவாரணம் கேட்க உள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கஜா புயல் காரணமாக இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. நாகை உள்ளிட்ட 10 தமிழக மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப் போட்டுள்ளது.