ஆசியாவின் மிகப்பெரிய சேரி பகுதியான மும்பை தாராவியில் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தாராவியில் நேற்றைய தினம் எந்த பயண பின்னணியும் இல்லாத 56 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மறுவாழ்வு ஆணைய திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடத்தில் அந்த நபர் வசித்து வந்துள்ளார். அந்த கட்டிடத்தில் மட்டும் 300 குடியிருப்புகள் உள்ளன. அவை முழுவதும் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றால் 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாட்டில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதியாக மும்பை உள்ளது. மொத்தமாக மகாராஷ்டிராவில் 335 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
5 சதுர கி.மீ.அளவு கொண்ட தாராவியில் 10 லட்சத்திற்கு அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவத்துள்ளது. இந்த தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாடுமுழுவதும், 1,965 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.