This Article is From Mar 07, 2020

“துயரத்தில் பங்கெடுக்கிறேன்!”- க.அன்பழகனுக்கு இரங்கல் தெரிவித்த சீமான்

"அவரது மறைவினால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்"

“துயரத்தில் பங்கெடுக்கிறேன்!”- க.அன்பழகனுக்கு இரங்கல் தெரிவித்த சீமான்

அவரது மறைவைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்

ஹைலைட்ஸ்

  • இன்று அதிகாலை காலமானார் க.அன்பழகன்
  • அவருக்கு வயது 97
  • திமுகவின் பொதுச் செயலாளராக இருந்தவர் க.அன்பழகன்

கடந்த 43 ஆண்டுகளாக திமுகவின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்து வந்த மூத்த அரசியல் தலைவர் பேராசிரியர் க.அன்பழகன் இன்று அதிகாலை காலமானார், அவருக்கு வயது 97. கடந்த சில நாட்களாகவே உடல்நலம் குன்றி காணப்பட்ட அவர் இன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.

பேராசிரியர் க.அன்பழகன் 1977ம் ஆண்டு முதல் ஒன்பது முறை திமுகவின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர். அவர் ஒன்பது முறை எம்.எல்.ஏ., பதவியிலும் ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும், மேலும் தமிழ்நாட்டின் முன்னாள் நிதியமைச்சராகவும் திகழ்ந்தவர்.  க.அன்பழகன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய  நண்பருமாவார்.

அவரது மறைவைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதேபோல நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் உருக்கமான இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

“இதழாளர், நூலாசிரியர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், தமிழகச் சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் முதலான பொறுப்புகளில் பணியாற்றிய தி.மு.க பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

அவரது மறைவினால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.” என்று இரங்கல் தெரிவித்துள்ளார் சீமான். 
 

.