This Article is From May 08, 2020

“கதவை மூடலாம்… வாயையும் வயிற்றையும் எப்படி மூடுவது?”- பட்டினியால் வாடும் மக்கள்; சீமான் வேதனை!!

"நாட்டு மக்களைக் காப்பாற்றும் எண்ணம் துளியும் இல்லாமல், எல்லாவற்றையும் நாசம் செய்துவிட்டு..."

“கதவை மூடலாம்… வாயையும் வயிற்றையும் எப்படி மூடுவது?”- பட்டினியால் வாடும் மக்கள்; சீமான் வேதனை!!

ஹைலைட்ஸ்

  • நாட்டு மக்கள் பற்றி அரசுக்கு துளியும் கவலை இல்லை: சீமான்
  • தேர்தலுக்குக் கூட ராணுவத்தை அழைக்கிறது அரசு: சீமான்
  • 'ஆனால், பட்டினியைப் போக்க ராணுவத்தை ஏன் அரசு பயன்படுத்தவில்லை'

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ஊரடங்கு 40 நாட்களுக்கு மேலாக அமலில் உள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தினக் கூலிகளும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட எளிய மனிதர்கள்தான். பல இடங்களில் மக்களுக்குப் போதிய உணவு கிடைக்கவில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பட்டினியால் வாடும் மக்களைப் பற்றி மத்திய, மாநில அரசுகள் சிந்திக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். 

இது குறித்து சீமான் மேலும் பேசுகையில், “கொரோனா பரவல் வரக் கூடாது என்பதற்காக கேட், வாசல் கதவு என எல்லாவற்றையும் மூடி வைத்துக் கொள்ளலாம். ஆனால் வாயையும் வயிற்றையும் எப்படி மூடிக் கொள்வது?

ஒரு சாதாரண தேர்தலுக்கு நாட்டின் துணை ராணுவப் படையை கொண்டு வந்து குவிக்கிறது மத்திய அரசு. இப்போது கண்ணுக்குத் தெரியாத ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரில் பலருக்கு உணவு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். எங்கெல்லாம் உணவு கிடைக்கவில்லையோ, அங்கெல்லாம் உணவு தானியக் கிடங்கில் இருக்கும் பொருட்களை, ராணுவத்தின் உதவியோடு கொண்டு போய் சேர்க்கலாம். ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருக்கிறது மத்திய அரசு. 

நாட்டு மக்களைக் காப்பாற்றும் எண்ணம் துளியும் இல்லாமல், எல்லாவற்றையும் நாசம் செய்துவிட்டு, நீங்கள் விளக்கு ஏற்றுங்கள், கை தட்டுங்கள் என்று சொல்வது மிகவும் வேடிக்கையாக உள்ளது,” என்று வேதனைப்பட்டு உள்ளார். 


 

.