This Article is From Nov 23, 2019

ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகும் சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி!

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகும் சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி!

உச்ச நீதிமன்றத்தை அணுகும் சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி

Mumbai:


மகாராஷ்டிரா அரசியல் விவகராம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மகாராஷ்டிரா அரசியலில் எதிர்பாராத திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். 

மகாராஷ்டிராவில் கடந்த 10 நாட்களாக குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் இருந்த நிலையில், பாஜகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தது. 

இதற்காக, பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தலைமையில் இன்று காலை 8 மணி அளவில் ராஜ் பவனில், தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டனர். 

இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா அரசியலில் திருப்பத்துக்கு மேல் திருப்பமாக பாஜகவோடு கூட்டணி அமைத்தது தேசியவாத காங்கிரஸின் முடிவல்ல என்று அக்கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க திட்டமிட்டது. இதற்காக தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இதையடுத்து, சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான நிலைப்பாட்டில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இறுதிக்கட்டத்தை எட்டியதாகவும், சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரேவே முதல்வராக 5 வருடமும் இருப்பார் என்று நேற்றைய தினம் தகவல்கள் வெளியானது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்று காலை எதிர்பாராத திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. இதற்காக மகாராஷ்டிராவில் இன்று காலை 5.47 மணி அளவில், மாநிலத்தில் அமலில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டது. தொடர்ந்து, காலை 8 மணி அளவில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். 

இந்நிலையில், மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

.