ஜம்மு காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் காயம் அடைந்தனர். ஸ்ரீநகரின் கரண் நகர் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பாக இதேபோன்ற தாக்குதல் நடந்தது. இதில் பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
சோப்பூர் பகுதியில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 15 பேரில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள சூழலில், அவர் மட்டும் ஸ்ரீ நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தாக்குதல் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்பின்னர் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2 மாதங்களுக்கு மேலாக காஷ்மீர் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது.
காஷ்மீர் பிரச்னை தீவிரம் அடைந்த 1990-ம் ஆண்டுக்கு பின்னர் ஏராளமான தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் 14,024 பொதுமக்களும், 5,273 பாதுகாப்பு படைவீரர்கள் உயிரிழந்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.