சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும இணை இயக்குனர் ராகேஷ் அஸ்தனா ஆகியோருக்கு இடையே அதிகார யுத்தம் நடந்து வருகிறது. இதில் அஸ்தனா மீது ஊழல் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பிரதமர் மோடி வரை சென்று விட்டது. இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சரத் பவார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது-
மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல வாக்குறுதிகளை பாஜக அளித்தது. 4 ஆண்டுகள் ஆகியும் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மன்மோகன் சிங் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முயற்சி செய்தார்.
தற்போதுள்ள மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டிருந்தால், சிபிஐ தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்கினார்கள் என்ற குற்றச்சாட்டு வந்திருக்காது. இப்போது வரைக்கும் பிரதமர் மோடி அமைதியாகத்தான் உள்ளார். அவர் இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜகவை பொறுத்தவரையில் வேண்டுமானால் பிரதமர் மோடி வலிமை வாய்ந்த தலைவராக இருக்கலாம். ஆனால் நாட்டைப் பொறுத்தவரையில் அவர் பலமான தலைவர் அல்ல. அவரது அமைச்சர்களிடம் திறமை இல்லை. அனைத்து முடிவுகளும் பிரதமர் அலுவலகத்தில்தான் எடுக்கப்படுகின்றன. அதற்கு அமைச்சர்கள் கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்கிறார்கள்.
ரஃபேல் விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலை ரூ. 570 கோடியில் இருந்து எப்படி ரூ. 1,600 கோடியாக அதிகரித்தது?. இதனை மத்திய அரசு விளக்க வேண்டும்.
இவ்வாறு சரத் பவார் பேசினார்.