நாடாளுமன்றத்தில் இன்று குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் சிவசேனா அந்த மசோதாவை கண்களுக்குப் புலப்படாத வகையில் இந்து -முஸ்லீம் பிரிவாதத்தை முன்னெடுக்கிறது என விமர்சனம் செய்துள்ளது.
சிவசேனாவின் இதழான சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: குடியுரிமை திருத்த மசோத என்ற பெயரில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை “மதரீதியாக தேர்ந்தெடுத்து ஏற்றுக் கொள்வது” நாட்டில் மதப்போருக்கு தூண்டுதலாக ஆகிவிடாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
நம் நாட்டில் ஏற்கனவே பிரச்னைகள் இல்லாதது போல் மற்றுமொரு பிரச்னையாக இந்த மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த மசோதா மூலம் இந்துக்கள் முஸ்லிம்கள் பிரிவினை வாதத்தை கண்களுக்கு புலப்படா வகையில் ஆட்சியாளர்கள் மேற்கொள்கின்றனர்.
வடகிழக்கு மாநிலங்களும் பிஹாரும் இந்த மசோதாவை எதிர்க்கிறது. மேற்கு வங்கம் கடுமையாக எதிர்க்கிறது.
சட்டவிரோதமாக குடியேறியவர்களின் சரியான எண்ணிக்கை முதலில் வெளியிடப்படவேண்டும். இது லட்சக்கணக்கில் இருந்தால் அவர்கள் எங்கு வைக்கப்படுவார்கள்? என்று சிவசேனா தலையங்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.
குடியுரிமை (திருத்த) மசோதா பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் முஸ்லிம் அல்லாத அகதிகள் இந்திய குடிமக்களாக மாறுவததை எளிதாக்கும் வகையில் அறுபதாண்டு கால சட்டத்தை திருத்துவதற்கு முயல்கிறது. பல எதிர்க்கட்சிகள் முன்மொழியப்பட்ட சட்டதிருத்தம் பாரபட்சமானது என்று கூறுகின்றன. மேலும் இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மையின் அடிப்படைக் கொள்கைக்கு முரணானது என்று குற்றம் சாட்டியுள்ளது.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக, 40 ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவுடன் இருந்த கூட்டணி ஆட்சியை முறித்து கொண்டு சிவசேனா வெளியேறியது. இறுதியாக தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது.