ஆந்திராவில் பெற்ற மகனையே ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் வீர ராஜூ. இவர் கடற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகனும் கடற்படையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், புதனன்று வீர ராஜூவின் வீட்டில் கார் பார்க்கிங் அருகே அவரது மகன் அமர்ந்திருக்கிறார்.
அப்போது பின்னால் சுத்தியலுடன் மெதுவாக வந்த வீர ராஜூ, பெற்ற மகன் என்று கூட பாராமல் தலையில் ஒரே அடியாக சுத்தியலால் அடித்துள்ளார். இதில் முதல் அடியிலேயே அவரது மகன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனையடுத்து விசாகப்பட்டினம் காவல் நிலையத்தில் வீர ராஜூ சரணடைந்தார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வீர ராஜூவுக்கும் அவரது மகனுக்கும் இடையே சொத்து பிரித்துக் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. அந்த ஆத்திரத்தில் தான் வீர ராஜூ தனது மகனைக் கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் கார் பார்க்கிங்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதன்படி, வீர ராஜூ மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
(With inputs from ANI)