பாகிஸ்தானில் சீக்கிய பெண் ஒருவர் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அந்த பெண் குடும்பத்தினரிடம் பத்திரமாக சேர்க்கப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜக்ஜித் கவுர் (19) என்ற அந்த சீக்கிய பெண், கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதையடுத்து, தங்களது மகள் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அந்த குடும்பதினர் புகார் கூறும் வீடியோ ஒன்றை மஞ்சிந்தர் சிங் சிர்சா என்ற சட்டமன்ற உறுப்பினர் வெளியிட்ட பின்னரே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களின் கவனத்தை பெற்று அந்த சமூகத்தினர் மத்தியில் பெரும் கோபத்தை கிளப்பியுள்ளது. இதனிடையே, அந்த பெண்ணின் தந்தை பகவான் சிங் குருத்வாரா தம்பு சாஹிப்பின், மதக்குரு என தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.