2 புலிகளை கரடி ஒன்று துரத்திச் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கரடியை விட புலிக்குத்தான் சக்தி அதிகம் என்று கேள்விப்பட்டிருப்போம். அத்துடன் 2 புலிகள் சேர்ந்திருந்தால், அவற்றின் பலம் கரடியைக் காட்டிலும் அதிகம் என்றே சொல்லலாம். அப்படியிருந்தாலும், 2 புலிகளை விரட்டியடிக்கிறது இந்தக் கரடி.
ராஜஸ்தான் மாநிலம் ரான்தாம்போர் தேசிய பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை மாநிலங்களவை உறுப்பினர் பரிமல் நத்வானி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ளார்.
முதலில் புலி ஒன்று மெல்ல கரடியின் பக்கத்தில் வந்து, அதனை மிரட்டிப் பார்க்கிறது. இதற்கு அஞ்சாத கரடி, ஒற்றைப் புலியை துரத்தத் தொடங்கியது.
சற்று தூரம் சென்றதும் இன்னொரு புலி சேர்ந்து கொண்டு கரடியை மிரட்டப் பார்க்கிறது. இதற்கு அசராத கரடி, புலிகள் இரண்டையும் விரட்டியடித்து செல்கிறது.
புலிகளை மொத்தமாக விரட்டியதும், முன்னங்கால்களை தூக்கி கரடி கிண்டல் செய்யத் தொடங்கியது.
இந்த காட்சியை பதிவிட்டுள்ள பரிமல் நத்வானி, ‘எதிர்பாராத கரடி – புலிகள் இடையிலான மோதல்களைப் பாருங்கள். கரடியை அச்சுறுத்த முயன்று புலிகள் பயந்து ஓடுகின்றன' என்ற குறிப்பிட்டுள்ளார்.
வீடியோவை பார்க்க
:
வீடியோ அப்லோட் செய்யப்பட்ட சில மணி நேரத்தில் 28 ஆயிரம் பார்வைகளை கடந்துள்ளது. இதனை ஏராளமானோர் வரவேற்று கமென்ட் செய்துள்ளனர். புலிகள் குட்டிப் புலிகளாக மாறிவிட்டன என்று அவர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
இந்த வீடியோ ஒரு மாதத்திற்கு முன்பாக முதலில் வெளி வந்தது. அப்போது யூடியூபில் ரான்தம்போர் உயிரியல் பூங்கா பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அந்தப் பூங்காவில் இதுபோன்ற வினோத சம்பவம் அடிக்கடி நடக்கின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின்போது, 2 புலிகள் பெண்புலிக்காக சண்டையிட்டுக் கொண்டன. இந்த வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.