லடாக் பகுதியில் பணிபுரியும் 34 வயதான இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த ராணுவ வீரர், இந்திய ராணுவத்தின், லடாக் ஸ்கவுட்ஸ் படையைச் சேர்ந்தவர். அவர் கடந்த மாதம் விடுமுறையிலிருந்துள்ளார். அப்போது, பிப்.27ம் தேதியன்று அவரது தந்தை இரான் சென்று திரும்பியுள்ளார்.
இதையடுத்து, தந்தையைப் பார்த்துவிட்டு மார்ச்.2ம் தேதி மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். இதனிடையே, பிப்.29ம் தேதியன்று, தந்தைக்கு கொரோனா அறிகுறி ஏற்படவே அவர் மருத்துவமனையில் சேர்ந்தார்.
அப்போது, அவரது ரத்தப் பரிசோதனையில், மார்ச் 6ம் தேதியன்று அவருக்கு கொரோனா உள்ளது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் தனி வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த வீரர் மீண்டும் தனது பணியில் சேர்ந்திருந்தாலும், அவர் தனது சொந்த கிராமத்தில் தங்கி, தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் அவரது குடும்பத்திற்கு உதவினார் என்று தகவல்கள் கூறுகின்றன.
இதைத்தொடர்ந்து, அவரது 2 குழந்தைகளும், மனைவியும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 147 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.