யாராவது கேட்டை திறந்து பேட்டி கொடுத்துவிட்டு படப்பிடிப்புக்கு சென்றுவிட்டால் அதை ஊடகங்கள் முக்கிய செய்தியாக ஒளிபரப்புகின்றன என நடிகர் ரஜினி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக சாடியுள்ளார்.
சென்னை ராயபுரத்தில் திமுக நிர்வாகி இல்லத்திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் பேசியதாவது, டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக ஜெயகுமார் சரணடைந்துள்ளார். தவறாக நினைக்க வேண்டாம் அது இடைத்தரகர் ஜெயகுமார். சிபிசிஐடி போலிஸார் தேடிவந்த நிலையில் இடைத்தரகர் ஜெயக்குமார் தானாக முன்வந்து சரணடைய காரணம் என்ன? அங்குதான் சூழ்ச்சி இருக்கிறது.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஆனால், அந்த துறை சார்ந்த அமைச்சரான ஜெயகுமார், முறைகேடு தொடர்பாக பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறோம்.
அப்போதுதான் சுதந்திரமாக விசாரனை நடக்கும். அடுத்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தற்போது நடைபெற்று வரும் ஊழல், லஞ்சம், லாவண்யம் அனைத்துக்கும் விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத் தருவோம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆன்மிகவாதிகள் என்னோடு இருப்பது எனக்கும் பெருமைதான். இந்து மதத்தை வைத்து சிலர் அரசியல் செய்து வருகின்றனர். அதை வைத்து திமுகவை வீட்டிற்கு அனுப்பிவிட வேண்டும் என எண்ணுகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.
ஊடகங்கள் உண்மைச் செய்தியை மறைக்கின்றன. ஊடகங்களைச் சொல்லிக் குற்றமில்லை; அவர்களை இயக்குகிறவர்கள் தான் எல்லாம். ஆனால், எவ்வளவுதான் மூடி மறைத்தாலும் மக்கள் உண்மையை அறிந்து திமுக பக்கம் நிற்கிறார்கள். யாராவது கேட்டை திறந்து பேட்டி கொடுத்துவிட்டு படப்பிடிப்புக்கு சென்றுவிட்டால் அதை ஊடகங்கள் முக்கிய செய்தியாக ஒளிபரப்புகின்றன என்று அவர் கடுமையாக சாடினார்.