This Article is From Jun 01, 2019

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு!

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sonia Gandhi: நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு

New Delhi:

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்தார். இதையடுத்து அவர் ஒரு மனதாக, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தை தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று, தான் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், அவரது ராஜினாமாவை காரிய கமிட்டி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், ராகுல் தனது ராஜினாமா செய்வதான முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க அவர் கட்சிக்கு கால அவகாசம் கொடுத்தாகவும் தெரிகிறது. ராகுலின் இந்த முடிவுக்கு அவரது தாயார் சோனியா காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை ஏற்கும் மனநிலையில் காங்கிரஸின் முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது.

அவர்கள், தொடர்ந்து ராகுலை போன் மூலம் தொடர்பு கொண்டு, ‘முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்' என்று வலியுறுத்தி வருகிறார்களாம். ‘ராஜினாமா செய்ய வேண்டாம். ஆனால், கட்சியில் பல விஷயங்களை மாற்றியமைக்கலாம்' என்றும் அவர்கள் அறிவுரையும் கூறியுள்ளார்களாம்.

இதேபோல், காரிய கமிட்டி கூட்டத்தின் போது ராகுல், காந்தி குடும்பத்தில் இருந்துதான் தலைவராக ஒருவர் வர வேண்டும் என்று அவசியமில்லை என்று பேசியிருக்கிறார். காங்கிரஸ் நிர்வாகிகள், பிரியங்காவின் பெயரை முன்மொழிந்துள்ளனர். அதனால் ராகுல், தன் சகோதரி, தாயாரை இதற்குள் இழுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியதாக கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் காங்கிரஸ் 52 தொகுதிகளில் மற்றுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் 18 மாநிலங்களில் ஒரு இடத்தைக் கூட ஜெயிக்கவில்லை. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநிலங்களும் இதில் அடங்கும். டிசம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இந்த மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைத்த நிலையிலும் அங்கும் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்வு செய்யப்பட இருப்பதாகக் கூறப் பட்டது. அதன்படி இந்தக் கூட்டம் நாடாளுமன்ற மைய அறையில் இன்று கூடியது.

ராகுல் காந்தி தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் 52 மக்களவை எம்.பி.க்களுடன், மாநிலங்களவை எம்.பி.க்களும் பங்கேற்றனர். இதில் நாடாளுமன்றக் குழு தலைவராக, சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்தார். இதையடுத்து அவர் ஒரு மனதாக, தேர்ந்தெடுக்கப் பட்டார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் காங்கிரஸ் எம்.பிக்களுக்கும் அவர் தலைவராக இருப்பார்.

.