This Article is From Apr 11, 2020

பொருளாதாரத்தை முடக்கும் ஊரடங்கு - மத்திய அரசிடம் தகுந்த திட்டம் இருக்கும் என்று நம்பிக்கை ? : சோனியா காந்தி

இந்த ஊரடங்கு நமது பொருளாதாரத்திற்கு நிறைய சுமைகளை ஏற்படுத்தப் போகிறது

பொருளாதாரத்தை முடக்கும் ஊரடங்கு - மத்திய அரசிடம் தகுந்த திட்டம் இருக்கும் என்று நம்பிக்கை ? : சோனியா காந்தி

பொருளாதாரம் ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் நிலையில் - இப்போது சிரமங்கள் மேலும் அதிகரிக்கும் என்று தோன்றுகிறது

ஹைலைட்ஸ்

  • ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்
  • கடந்த மாதம் நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அறிவித்ததால்
  • உலகளாவிய நிதி அமைப்புகளில் ஒன்றான ஐ.எம்.எப் எனப்படும்
New Delhi:

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நாடு தழுவிய ஊரடங்கு, இந்திய பொருளாதாரத்தில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று தெரிவித்துள்ளார். குறிப்பாக ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் இந்த ஊரடங்கால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். நிச்சயம் மத்திய அரசிடம் இந்த பாதிப்பினை சரிசெய்ய மாற்று திட்டம் இருக்கும் என்று, நம்புவதாகவும் கூறியுள்ளார்.

"இந்த ஊரடங்கு நமது பொருளாதாரத்திற்கு நிறைய சுமைகளை ஏற்படுத்தப் போகிறது. பொருளாதாரம் ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் நிலையில் - இப்போது சிரமங்கள் மேலும் அதிகரிக்கும் என்று தோன்றுகிறது. அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்" என்று திருமதி காந்தி காங்கிரஸ் மூத்த உறுப்பினர்களின் கூட்டத்தின்போது பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். மேலும், "இந்த சவாலை எதிர்கொள்ளும் திட்டத்தை அரசாங்கம் கொண்டு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்," என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த மாதம் நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அறிவித்ததால், இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான வணிகங்கள் நிறுவனங்கள் மூடப்பட்டன. பொருளாதார நடவடிக்கைகளை அடக்குவது கடுமையான வீழ்ச்சியைக் கொண்டுவரக்கூடும் என்ற கவலையைத் தற்போது தூண்டியுள்ளது. மிகப்பெரிய, உலகளாவிய நிதி அமைப்புகளில் ஒன்றான ஐ.எம்.எப் எனப்படும் 'இன்டர்நேஷனல் மொனிட்டரி பண்ட்', கடந்த நூற்றாண்டில் இல்லாத அளவிற்கு, ஒரு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி குறித்து எச்சரித்துள்ளது.

இந்தியாவில், ஊரடங்கிற்கு பிறகு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது தினசரி ஊதியம் பெறுபவர்கள். அவர்களுடைய இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சொந்த ஊர்களை விடுத்து பிற நகரங்களுக்கு சென்று வேலை செய்யும் தொழிலாளர்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பல கிலோமீட்டர் நடந்தே சென்று வருகின்றனர். அவ்வாறு செல்பவர்கள் ஒரு பெரிய சுகாதார அபாயத்தை ஏற்படுத்தியதால், மத்திய அரசு மாநிலங்களின் எல்லைகளை மூட உத்தரவிட்டது. மேலும் தற்போது புலம்பெயர்ந்து செல்லும் மக்கள் கொரோனா வைரஸ் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

"ஊரடங்கால், பல ஏழை தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பி வருகின்றனர், எங்கள் தொழிலாளர்கள் அவர்களுக்கு உதவ தற்போது களமிறங்கியுள்ளனர். நாடு முழுவதும், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் காங்கிரஸ் தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்று சோனியா காந்தி கூறினார்.

.