பெங்களூரு நகரத்தின் மிகவும் கூட்ட நெரிசலான தெரு ஒன்றின் ஓரத்தில் மக்கள் நடந்து செல்கின்றனர். திடீரென்று வேகமாக வரும் கார் ஒன்று, அவர்கள் மீது மோதுகிறது. இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியிருக்கின்றது.
தென் கிழக்கு பெங்களூருவில் உள்ள எச்.எஸ்.ஆர் லே-அவுட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று மதியம் 2 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் 4 பேருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.
வாகனத்தை ஓட்டி வந்த நபர், குடி போதையில் இருந்ததாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
பெங்களூருவில் மது போதையில் வண்டி ஓட்டி, விபத்து ஏற்படுத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கடந்த வாரம் கூட, கன்னட திரையுலகைச் சேர்ந்த ஒரு நடிகர், மது போதையில் தனது காரை, சாலையில் சென்றவர்கள் மீது மோதியுள்ளார். இதனால் கோபமடைந்த மக்கள், அவரை வாகனத்தில் இருந்து கீழே இழுத்து சரமாரியாக அடித்துள்ளனர்.