தேர்தல் வெற்றிக்காகவே காங்கிரஸ் விவசாயக் கடன் தள்ளுபடியை பயன்படுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலின் போது விவசாயக் கடன் தள்ளுபடி என்பதே காங்கிரஸின் மிகப்பெரும் வாக்குறுதியாக இருந்தது. இதற்காகவே பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கப்படும் என பாஜக அரசு அறிவித்தது.
ஆனால், பாஜகவின் இந்த திட்டத்தை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் வருடத்திற்கு ரூ.6000 என்பது மிகவும் குறைவான தொகை என தெரிவித்தனர். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி தான் செலவாகும். எனவே இந்த அறிவிப்பானது அரசியல் அரசியல் வித்தை என காங்கிரஸ் விமர்சித்தது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்தி மோடி, 10 ஆண்டுகளுக்கு முன் 2008-09ம் ஆண்டு விவசாயிகளுக்கு வேளாண் கடன் தள்ளுபடியாக ரூ.6 லட்சம் கோடியை காங்கிரஸ் கட்சியினர் அறிவித்தார்கள்.
ஆனால், தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்தபின் விவசாயிகளுக்கு ரூ.52 ஆயிரம் மட்டுமே கடன் தள்ளுபடி செய்து, விவசாயிகளை ஏமாற்றினார்கள். தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக மட்டுமே விவசாயக் கடன் தள்ளுபடியென காங்கிரஸ் வாக்குறுதியளிக்கிறது.
நாங்கள் ஒவ்வொருவருக்கும் ஜன் தன் வங்கிக்கணக்கை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். ஆனால், இதை எதிர்க்கட்சிகள் கேலி செய்கிறார்கள். ஆனால், ஜன்தன் வங்கிக் கணக்குகள் எப்படிப் பயன்படப்போகிறது இப்போது தெரியும்.
எதிர்காலத்தில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக ஜன் தன் கணக்கில் சேர்க்கப்படும். ஏறக்குறைய ரூ.75 ஆயிரம் கோடி விவசாயிகள் வங்கிக்கணக்கிற்கு மாற்றப்படும் என்று அவர் கூறினார்.