இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கடந்த மாதம், தான் நியமித்த பிரதமரான மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக புதிய நம்பிக்கையில்லா தீர்மானம் கோரியுள்ளார். இது குறித்து அவர் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
இரண்டு நாளுக்கு முன்னர் கூடிய இலங்கை நாடாளுமன்றம், அதிபரால் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக் கொண்டது. மொத்தம் 225 பேர் இருக்கும் நாடாளுமன்றத்தில் 122 பேர் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதையடுத்து ராஜபக்சேவின் நியமனம் சட்ட சாசனத்துக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவை நிராகரித்துள்ள சிறிசேனா, இன்று மீண்டும் இன்னொரு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து சிறிசேனா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தீர்மானத்துக்கு எதிராக முறையான வகையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதை சரியாக செய்தால், நானும் அரசியல் சட்ட சாசனத்துக்கு ஏற்றாற் போல் நடந்து கொள்வேன்' என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலில் அதிரடி மாற்றமாக பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை, அதிபர் சிறிசேனா கடந்த மாதம் நீக்கினார். பின்னர் முன்னாள் அதிபராக இருந்த ராஜபக்சேவை, பிரதமர் பொறுப்பில் அமர்த்தினார்.
ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியிருந்த நிலையில், நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன கலைத்ததால் இலங்கையில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டிருந்தது. சிறிசேனவின் இந்த அதிரடி முடிவுகளுக்கு பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நாடாளுமன்ற சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற்றார் சிறிசேனா.
தொடர்ந்து ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவு கிடைக்கவே, தற்போது அதிபர் சிறிசேனா கொதித்தெழுந்து மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)