This Article is From Jul 27, 2020

'இழந்த பணம், புகழை மீட்டு விடலாம்; ஆனால் நேரத்தை மீட்க முடியாது’- ஏ.ஆர்.ரஹ்மான்

பாலிவுட் திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக கருத்துக்கள் ஏற்கெனவே மேலெழுந்து வந்த நிலையில் தற்போது ரஹ்மானின் கருத்து பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'இழந்த பணம், புகழை மீட்டு விடலாம்; ஆனால் நேரத்தை மீட்க முடியாது’- ஏ.ஆர்.ரஹ்மான்

இசையப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான தில் பெச்சாராவுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியிருந்தார். இதில் ஒன்பது பாடல்களை இயற்றியிருந்தார். இந்நிலையில் ரேடியோ மிர்ச்சிக்கு அளித்த பேட்டியில், “பாலிவுட் திரைப்படங்களுக்கு ஏன் அதிக இசையமைக்கவில்லை?” என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்டபோது, “நான் நல்ல திரைப்படங்களை வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் ஒரு கும்பல் எனக்கு எதிராக பாலிவுட்டில் இயங்குகிறது.” என வெளிப்படையாக கூறியிருந்தது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, “வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான்! நீங்கள் ஆண்மான்; அரிய வகை மான். உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை.” என டிவிட்டரில் ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, “பாலிவுட்டை கையாளக்கூடியதை விட உங்களிடம் அதிக திறமை இருக்கிறது என்பதை இது நிரூபிக்கிறது.” என பாலிவுட் கலைஞர் சேகர் கபூர் டிவிட் செய்திருந்தார்.

இந்நிலையில், “இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம். ஆனால், நேரத்தை மட்டும் மீட்க முடியாது. செய்வதற்கு நிறைய வேலைகள் உள்ளன. அமைதியாக கடந்து செல்வோம்.” என சேகர் கபூரின் டிவிட்டிற்கு ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக கருத்துக்கள் ஏற்கெனவே மேலெழுந்து வந்த நிலையில் தற்போது ரஹ்மானின் கருத்து பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.