This Article is From May 08, 2020

“மதுவை வீட்டிலேயே டெலிவரி செய்ய மாநில அரசுகள் யோசிக்க வேண்டும்!”- உச்ச நீதிமன்றம் பரிந்துரை

Coronavirus: நீதிபதிகள் அஷோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் பிஆர் கவாய் ஆகிய நீதிபதிகள் வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் வழக்கை விசாரித்தனர்

“மதுவை வீட்டிலேயே டெலிவரி செய்ய மாநில அரசுகள் யோசிக்க வேண்டும்!”- உச்ச நீதிமன்றம் பரிந்துரை

Coronavirus: மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய ‘சமூக விலகல்’ கடைபிடிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

ஹைலைட்ஸ்

  • மார்ச் 25 ஆம் தேதி மதுபானக் கடைகள் மூடப்பட்டன
  • கொரோனா ஊரடங்கால் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன
  • கடந்த திங்கட்கிழமை முதல் மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன
New Delhi:

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த மார்ச் 25 ஆம் தேதி, நாட்டில் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அவற்றைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இப்படி மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய ‘சமூக விலகல்' கடைபிடிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மனு குறித்து இன்று 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்தது. 

நீதிபதிகள் அஷோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் பிஆர் கவாய் ஆகிய நீதிபதிகள் வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் வழக்கை விசாரித்தனர். அப்போது அவர்கள், “இந்த மனு குறித்து எங்களால் எந்த உத்தரவும் போட முடியாது. ஆனால் மாநில அரசுகள் மதுபானங்களை வீட்டிலேயே டெலிவரி செய்வது அல்லது மறைமுகமாக விற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். இதன் மூலம் சமூக விலகல் கடைபிடிக்கப்படும்,” என்று கூறினர். 

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தீபக் சாய், “மிகவும் குறைந்த மதுபானக் கடைகளே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இதனால் மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே சமூக விலகலைப் பின்பற்றுவது மிகவும் சிக்கலாக மாறியுள்ளது. 

பொது மக்களின் வாழ்க்கை மதுபான விற்பனையால் பாதிக்கப்படக் கூடாது.  இது குறித்து மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவான பரிந்துரைகளை வழங்க வேண்டும்” என்று வாதிட்டார். 

இதற்கு நீதிபதி எஸ்கே கவுல், “வீட்டில் சென்று மதுபானங்களை டெலிவரி செய்வது குறித்து பேசப்பட்டு வருகின்றது. இந்த நேரத்தில் நாங்கள் என்ன செய்ய முடியும்?,” எனக் கேள்வி எழுப்பினார். 

உணவு டெலிவரி நிறுவனமான ஜொமேட்டோ, மதுபானங்களையும் வீட்டிலேயே டெலிவரி செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வந்துள்ளன. 

இதுவரை, மதுபானத்தை வீட்டில் சென்று டெலிவரி செய்வது குறித்து எந்த சட்டப்பூர்வமான விதிமுறைகளும் நாட்டில் இல்லை. ஆனால், இதை மாற்றுவதற்கு முயன்று வருகிறது சர்வதேச ஸ்பிரிட்ஸ் மற்றும் ஒயின்ஸ் இந்திய சங்கம். 

கடந்த திங்கள் முதல் நாட்டில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் மட்டுமே அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் மதுபானக் கடைகளில் சமூக விலகல் கடைபிடிக்க வேண்டும் என்றும், ஒரு சமயத்தில் 5 பேருக்கு மேல் கடையில் இருக்கக் கூடாது என்றும் விதிமுறைகள் வகுத்தது அரசு. 


 

.