This Article is From Feb 18, 2019

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு – தூத்துக்குடியில் பதற்றம்

உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை குறித்த தீர்ப்பு இன்று வெளியாகிறது. திறக்க தடை என்று தீர்ப்பு வெளியானால் பிரச்னை பெரிதாக ஏற்படாது. ஆனால் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தூத்துக்குடியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு – தூத்துக்குடியில் பதற்றம்

ஸ்டெர்லைட் ஆலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பதற்றம் காணப்படுகிறது.

ஹைலைட்ஸ்

  • தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள பகுதியில் பதற்றம் காணப்படுகிறது
  • அசம்பாவிதத்தை தடுக்க சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிப்பு
  • தமிழகத்தில் இன்று பெரும் எதிர்பார்ப்பை இந்த தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது

உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது. ஆலை திறக்கப்படுமா அல்லது மூடப்படுமா என்பது குறித்து இன்று முடிவு ஏற்படும் என்பதால் தூத்துக்குடியில் பதற்றம் காணப்படுகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் மற்றும் உடல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி அதனை மூடுவதற்கு வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் கடந்த மே 22-தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடும், தடியடியும் நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தார்கள்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பெரும் பதற்றம் காணப்பட்டது. நிலைமை தீவிரம் அடைந்த சூழலில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து, ஆலை மூடப்பட்டது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்து. இதில் ஆலையை திறக்க அனுமதி கிடைத்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதேபோன்று தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்து.

இருதரப்பு வாதங்களும் நிறைவுற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது. திறக்க தடை என்று தீர்ப்பு வெளியானால் பிரச்னை பெரிதாக ஏற்படாது. ஆனால் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தூத்துக்குடியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் படிக்க - "வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!"

.