This Article is From Jan 31, 2019

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதலாக 12 மதிப்பெண்கள் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வேலை வாய்ப்பை உறுதி செய்யும் பாடத்திட்டம் அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதலாக 12 மதிப்பெண்கள் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையின் சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

ஹைலைட்ஸ்

  • மரம் வளர்க்கும் மாணவர்களூக்கு பாடத்திற்கு தலா 2 மதிப்பெண்கள்
  • வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் வருகிறது
  • அடுத்த கல்வியாண்டில் தமிழகத்தில் பல மாற்றங்கள் வருகிறது

மரம் வளர்க்கும் பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக 12 மதிப்பெண்கள் வழங்கும் முறை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

சென்னையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-

வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அமையும். படிப்புடன் சேர்த்து மரம் வளர்ப்பதற்கும் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும். 

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு பாடத்திற்கு தலா 2 மதிப்பெண்கள் வீதம் 6 பாடங்களுக்கு மொத்தம் 12 மதிப்பெண்கள் வழங்கப்படும். 12 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டுதான் பாடத்திட்டத்தை மாற்றியுள்ளோம். 

1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு மட்டுமே பாடத்திட்டத்தை தற்போது மாற்றியுள்ளோம். மீதமுள்ள வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். அப்படி மாற்றி அமைக்கப்படும்போது பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டம், வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் இருக்கும். 

கல்வி முறையில் மாற்றங்களை கொண்டுவர வெளிநாடுகளுக்கு தமிழக அரசு சார்பில் குழுக்கள் அனுப்பப்படுகின்றன.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 

.