This Article is From Mar 27, 2019

குக்கர் சின்னம் விவகாரம்; தினகரனுக்கு வரிந்துகட்டும் சுப்ரமணியன் சுவாமி!

முன்னதாக தினகரன், ‘எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்' என்று கூறினார்

குக்கர் சின்னம் விவகாரம்; தினகரனுக்கு வரிந்துகட்டும் சுப்ரமணியன் சுவாமி!

அமமுக என்ற புதிய கட்சியை தினகரன் தொடங்கிய பின்னரும், இதுவரை தேர்தல் ஆணையத்தில் அவர் அதைப் பதிவு செய்யவில்லை

எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் இடைத் தேர்தல்களில் அமமுக வேட்பாளர்களுக்கு ‘குக்கர் சின்னம்' ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் டிடிவி தினகரன். அதில் தீர்ப்பளித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையம் தினகரன் தரப்புக்கு பொதுச் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த நிர்வாகி, சுப்ரமணியன் சுவாமி கருத்து கூறியுள்ளார். 

அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ‘தினகரனுக்கு பொதுச் சின்னம் வழங்க மறுப்பது தவறானதாகும். தேர்தல் ஆணையம்தான், யாருக்கு எந்தச் சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யும். அதே நேரத்தில் தினகரனுக்கு பொதுச் சின்னம் வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தொடர்ந்து இதில் இழுபறியாவது சரியல்ல' என்று கூறி தினகரனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். 

முன்னதாக தினகரன், ‘எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். இன்று முதல் தீவிர பிரசாரத்தை ஆரம்பிக்கிறேன். ராயபுரத்தில் இருந்து பிரசாரத்தைத் தொடங்க உள்ளேன். எந்தச் சின்னம் ஒதுக்கப்பட்டாலும் அது எங்கள் கட்சியின் வெற்றிச் சின்னமாக இருக்கும்' என்று கூறினார். 

அமமுக என்ற புதிய கட்சியை தினகரன் தொடங்கிய பின்னரும், இதுவரை தேர்தல் ஆணையத்தில் அவர் அதைப் பதிவு செய்யவில்லை. அதனால்தான் சின்னம் ஒதுக்கும் விஷயத்தில் தொடர்ந்து சிக்கல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தனிக் கட்சித் தொடங்கினாலும், அதிமுக-வை தனது கட்டுக்குள் கொண்டு வருவதுதான் தினகரனின் எண்ணமாக இருந்து வருகிறது. அந்த ஒரு காரணம்தான், புதிய கட்சியைப் பதிவு செய்வதை தள்ளிப் போட வைத்துள்ளதாக தெரிகறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இந்த நிலைமை மாற வாய்ப்புள்ளது. 


 

.