This Article is From Aug 02, 2018

சுனந்தா வழக்கு: சசி தரூர் வெளிநாட்டுப் பயணத்துக்கு கோர்ட் அனுமதி

2 லட்சம் ரூபாய் பிணைத்தொகை செலுத்திவிட்டு சசி தரூர் செல்லலாம், நாடு திரும்பிய பின் செலுத்திய தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.

சுனந்தா வழக்கு: சசி தரூர் வெளிநாட்டுப் பயணத்துக்கு கோர்ட் அனுமதி
New Delhi:

சுனந்தா வழக்கு: சசி தரூர் வெளிநாட்டுப் பயணத்துக்கு கோர்ட் அனுமதி 

2 லட்சம் ரூபாய் பிணைத்தொகை செலுத்திவிட்டு சசி தரூர் செல்லலாம், நாடு திரும்பிய பின் செலுத்திய தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது. 

Story:
மனைவி சுனந்தா புஷ்கர் நட்சத்திர ஓட்டல் அறையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், சசி தரூர் வெளிநாடு செல்ல டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

அமெரிக்கா, கனடா, ஜெர்மனி முதலிய ஐந்து நாடுகளுக்கு டிசம்பர் வரை எட்டுமுறை பயணம் செய்ய சசி தரூருக்குப் பெருநகரக் கூடுதல் முதன்மைக் குற்றவியல் நடுவர் சமர் விஷால் நேற்று ஒப்புதல் அளித்தார். 

"அவர் வழக்கு விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். சொன்ன தேதியில் கோர்ட்டில் ஆஜர் ஆகிறார். ஆகவே அவர் தப்பித்து ஓடுவார் என்று கருத இடமில்லை" என்று கூறி நீதிமன்றம் அவரது வெளிநாட்டுப் பயணத்துக்கு அனுமதி அளித்துள்ளது. 

இரண்டு இலட்சம் ரூபாய்க்கான பிணைத்தொகையை அவர் டெபாசிட்டாக செலுத்த கோர்ட் கூறியுள்ளது. பயணம் முடிந்து நாடு திரும்பியதும் அவருக்கு அத்தொகை திருப்பி அளிக்கப்படும். 

தனது பயணம் குறித்த தகவல்களை விசாரணை அதிகாரியிடம் வழங்கவும் சசி தரூருக்கு கோர்ட் உத்தரவிட்டது. மேலும் ஆதாரங்களை அழிப்பது சாட்சியங்களைப் பிறழச் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவரை கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. 

முன்னதாக, சசி தரூரின் வழக்கறிஞர் கௌரவ் குப்தாவின் மனுவை எதிர்த்த காவல்துறை, "சசி தரூருக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த அழைப்புகளைச் சரிபார்க்க வேண்டியிருக்கிறது" என்றும் "அவர் ஒவ்வொரு நாட்டின் பயணத்துக்கும் தனித்தனியாக விண்ணப்பித்திருக்க வேண்டும்" என்றும் கூறியது. இதற்கு குப்தா, அழைப்பிதழ்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க தக்க சான்றிதழ்களை அளிக்கத் தம் தரப்பு தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும் 'தனித்தனி மனுக்கள் கோர்ட்டின் நேரத்தை மிகுதியாக எடுத்துக்கொண்டு அனைவருக்கும் காலவிரயத்தை ஏற்படுத்தும். வழக்கு விசாரணையின் வேகத்தை பாதிக்கும்' என்று வாதாடினார். 

சாட்சியங்களின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட வழக்கின் ஆவணங்களை சசி தரூக்கு அளிக்கவும் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்கவேண்டி இருந்ததால் இதற்கு முன்பு ஒருமுறை நேரில் ஆஜர் ஆவதிலிருந்து சசி தரூருக்கு ஒருமுறை நீதிமன்றம் விலக்கு அளித்திருந்தது. 

ஜனவரி 17, 2014 அன்று சுனந்தா புஷ்கர் நட்சத்திர ஓட்டல் அறையில் இறந்தார். தரூரின் பங்களா அப்போது புனரமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் தரூரும் அவர் மனைவி சுனந்தாவும் ஓட்டல் அறையில் தங்கி இருந்தனர்.

இந்திய தண்டனைச் சட்டம் 498A (கணவன் அல்லது அவரது உறவினர் ஒரு பெண்ணைக் கொடுமைப்படுத்துவது), 306 (தற்கொலைக்குத் தூண்டுவது) ஆகிய பிரிவுகளின் கீழ் இதுதொடர்பாக சசி தரூர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும் அவர் கைது செய்யப்படவில்லை. 

இவ்வழக்கில் அவரை சந்தேகிக்க போதிய அடிப்படை இருப்பதாகக் கருதிய நீதிமன்றம் ஜூன் 5 இல் அவருக்கு சம்மன் அனுப்பியது.
ஜூலை 7 இல் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. 

.