திரிபுரா உயர்நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா இருந்தார்
New Delhi: நாட்டின் சட்ட அமைப்புகள், நாட்டில் உள்ள பணக்காரர்களுக்கும், அதிகார மிக்கவர்களுக்கும் ஆதரவாக உள்ளது என உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தனது பிரியாவிடை உரையில் கூறியுள்ளார். மேலும், நீதிபதிகள், நீதித்துறையில் உள்ள பிரச்சினைகளைக் கண்டு நெருப்புக்கோழியைப் போல தலையை மண்ணில் புதைத்து தப்பித்துக்கொள்ள முடியாது. நீதிபதிகள் நீதித்துறையில் உள்ள பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை சரிசெய்ய முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் விடைபெற்ற முதல் இந்திய நீதிபதி குப்தா. “நம்முடைய சட்டங்களும், சட்ட அமைப்புகளும் பணக்காரர்களுக்கும் அதிகார மிக்கவர்களுக்கும் ஆதரவாக உள்ளது. பணக்காரர்களோ, அதிகார மிக்கவர்களோ சிறையிலிருந்தால் அவர் மீண்டும் மீண்டும் உயர் நீதிமன்றங்களை அணுகுவார். ஆனால் ஒரு ஏழை அவ்வாறாக முயற்சி செய்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.“ என கூறியுள்ளார்.
“ஒரு பணக்காரர் பிணையில் இருப்பாரானால், அவரது வழக்கினை தாமதப்படுத்த விரும்பினால் அவர் உயர் நீதிமன்றங்களை அணுகுவார். அல்லது விசாரணையைத் தாமதப்படுத்தவும், அதன் மூலமாக விரக்தி மனப்பான்மையை உருவாக்கவும் அவர் முயல்வார். நாடு நீதி துறையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. நீதித்துறையில் எதுவும் நடக்கவில்லை என தலையை மண்ணில் நெருப்புக்கோழியை போல புதைத்துக்கொண்டு இருந்துவிட முடியாது. நீதித்துறையின் பிரச்சனைகளை நாம் அடையாளம் கண்டு அதனை சரிசெய்ய வேண்டும். நீதித்துறையின் ஒருமைப்பாடுகளை எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் ஆபத்தில் கொண்டு செல்ல கூடாது” என குப்தா தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த நெருக்கடி காலகட்டங்களில் அரசியலமைப்பு உரிமைகள் மீறப்படும். சமானிய மக்கள் வழக்கம் போல குரலற்று போகிறார்கள். சமானிய மக்களுக்காக எவராவது குரல் எழுப்பினால் அதனை நீதிமன்றம் கேட்க வேண்டும் என நான் விரும்புகிறேன். சமானிய மக்களுக்காக ஏதாவது செய்ய முடியுமெனில் அவர்களுக்கான வாய்பினை கொடுங்கள்.“ என குப்தா தனது உரையை முடித்தார்.
இந்த வீடியோ கான்பரன்சிங் விடைபெறும் நிகழ்வில் ஏராளமான உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் துஷ்யந்த் டேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“மாற்றுக் கருத்து உள்ள குடிமக்கள் தங்களுடைய எதிர்ப்பினை அமைதியான முறையில் வெளிப்படுத்த அனுமதி உண்டு என்கிற உங்களது கருத்துக்கள் ஒருபோதும் மறக்கப்படமாட்டாது. உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்கும்போது தெரிவித்த தைரியமான கருத்து இது“ என அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தனது கருத்தினை இந்த கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் மிக முக்கிய தீர்ப்புகளில் குப்தாவின் பங்கு இருந்துள்ளது. குறிப்பாக மைனர் பெண்ணுடன், அந்த பெண்ணின் அனுமதியோடு உறவு கொண்டாலும் அது பாலியல் வன்புணர்வு குற்றமாகவே கருதப்படும் என்கிற தீர்ப்பு முக்கியமானதாகும். இவர் 2017 உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். இவர் திரிபுரா உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக இருந்தவராவார்.
(With inputs from PTI)