This Article is From Oct 04, 2019

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் அதிரடியாக மறுத்துவிட்டது. 

Advertisement
தமிழ்நாடு Edited by (with inputs from ANI)

மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம் முடிவை அறிவிக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

ராதாபுரம் தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு, அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதைத்தொடர்ந்து, இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், மறுவாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கக்கோரி எம்எல்ஏ இன்பதுரை, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்து மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை என உத்தரவிட்டது.

அதன்படி, மறுவாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில், 19, 20, 21 ஆகிய கடைசி 3 சுற்றுகளின் வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த மறு வாக்கு எண்ணிக்கை பணிகளுக்காக 24 அதிகாரிகள் மற்றும்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பொறியாளர்கள் 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே போல, தொகுதி வேட்பாளர்கள் மற்றும் அவருடன் ஒரு வழக்கறிஞர் என 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இது தவிர இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு செல்போன் போன்ற சாதனைகளை எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் நூலகத்தின் 2வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் வாக்கு எண்ணிக்கை நடை பெற்று வருகிறது.

இதனிடையே, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. அதில், மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் அதிரடியாக மறுத்துவிட்டது. 

Advertisement

அதே சமயம் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து அக்டோபர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Advertisement