புதுடில்லி: ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, நீதிபதி ஏ.எம் கன்வில்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவை வரும் ஆகஸ்டு 17 ஆம் தேதி விசாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்
கடந்த மே மாதம், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி கடந்த ஆகஸ்டு மாதம் 9 ஆம் தேதி, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதனால், ஸ்டெர்லைட் நிர்வாக பணிகளுக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்தும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைப்பெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசின் மேல் முறையீட்டை வரும் ஆகஸ்டு மாதம் 17 ஆம் தேதி விசாரிப்பதாக அறிவித்துள்ளனர்