கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கோவையை சேர்ந்த தொழிலதிபரின் 11 வயது மகள் முஸ்கான், 8 வயது மகன் ரித்திக். இவர்கள் இருவரும் காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5 மற்றும் 3-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி அவர்கள் பள்ளிக்கு சென்ற போது கடத்தி செல்லப்பட்டனர்.
இதில் சிறுமி பாலியல் வன்கொடுமையும் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இரு குழந்தைகள் கொலை தொடர்பாக மோகன்ராஜ் மற்றும் அவனது கூட்டாளி மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மோகன்ராஜை போலீசார் பொள்ளாச்சிக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது மோகன்ராஜ் போலீசார் பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்று போது, அவனை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
தொடர்ந்து, நடந்த விசாரணையை அடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், மனோகரனுக்கு இரட்டை தூக்கு தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து மனோகரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், சென்னை உயர்நீதிமன்றமும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
பின்னர் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.