நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் மருத்துவர்கள் உதவியை நாடியதை தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த நான்கு தடயவியல் மருத்துவ குழுவினர் சுஷாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்கின்றனர்.
தடயவியல் மருத்துவ நிபுணர் சுதிர் குப்தா தலைமையில் ஏய்ம்ஸ் மருத்துவ குழு செயல்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து, இரண்டு நாட்களில் சிபிஐ தடயவியல் அறிக்கை குறித்த விவரத்தை வெளியிடும் என தெரிகிறது.
இதுதொடர்பாக சுதிர்குப்தா என்டிடிவியிடம் கூறும்போது, இந்த வழக்கை கொலை நிகழ்ந்துள்ளதா என்ற கோணத்தில் ஆராய்வதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்குவோம், ஒட்டுமொத்தமாக சாத்தியமான மரணத்திற்கான அனைத்து வழிகளையும் ஆராய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
சுதிர் குப்தா இதற்கு முன்பு சுனந்தா புஷ்கர் மற்றும் ஷீனா போரா மரண வழக்குகள் போன்ற பல பெரும் வழக்குகளில் பிரேத பரிசோதனை செய்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். எனினும், அது தற்கொலை அல்ல, கொலை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது சொந்த மாநிலமான பீகாரில் அம்மாநில அரசு விசாரணை நடத்தி வருகிறது. சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட மகாரஷ்டிராவிலும் அம்மாநில அரசு விசாரணை செய்து வருகிறது. இதில் இரு மாநில அரசுகளுக்கு இடையேயும் மோதல் போக்கு நிலவியது.
இதைத்தொடர்ந்து, ஒரு கட்டத்தில் சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைந்தது பீகார் அரசு. இதற்கு மகாராஷ்டிரா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில், பீகார் அரசுக்கு பெரும் வெற்றியாக சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை ரியா சக்ரவர்த்தி, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி, பாட்னாவில் அவரது குடும்பத்தினர் பதிவு செய்த முதல்கட்ட தகவல் அறிக்கையை மும்பைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், மும்பை காவல்துறையினர் தற்செயலான மரண அறிக்கையை மட்டுமே பதிவு செய்துள்ளதால், அதற்கு விசாரணை அதிகாரம் குறைவாகவே உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. எனினும், பீகார் காவல்துறையினர் "முழு அளவிலான எஃப்.ஐ.ஆர்" பதிவு செய்துள்ளனர், இது ஏற்கனவே சிபிஐக்கும் மாற்றப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மகாராஷ்டிரா அரசு கேட்டுக் கொண்டது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக வேறு ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அதுவும் சிபிஐ மூலம் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணையை சிபிஐ நேற்று முதல் துவங்கியுள்ளது. முதல்கட்டமாக சுஷாந்த் சிங்கின் ஊழியரை நேற்று அதிகாரிகள் விசாரித்துள்ளனர். தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டுள்ள ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் அடுத்த வாரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்குவார்கள் என தெரிகிறது.