பாட்னா மற்றும் மும்பை போலீசாரிடையே நிலவி வந்த மோதல் போக்கு, நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக விசாரிக்க சென்ற பீகார் காவல்துறை அதிகாரியை மும்பை போலீசார் தனிமைப்படுத்தியதை தொடர்ந்து, இந்த போக்கு இன்னும் அதிகரித்துள்ளது.
இதனிடையே, இந்த விவகாரத்தில் பதிலளித்துள்ள பீகார் முதல்வர் நிதீஷ் குமார், இது அரசியல் அல்ல என்று கூறியுள்ளார். தொடர்ந்து, போலீஸ் அதிகாரி வினய் திவாரிக்கு நடந்தது, சரியானது கிடையாது. போலீசார் அவர்களது பணியை மேற்கொள்கின்றனர். இதுகுறித்து எங்கள் டிஜிபி அவர்களிடம் பேசுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் இருந்து வழக்கு விசாரணைக்காக சென்ற மூத்த ஐபிஎஸ் அதிகாரி, மும்பை போலீசாரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பீகார் தலைமை போலீசார் நேற்றிரவு ட்விட்டரில் தெரிவித்திருந்தது.
இது குறித்து பீகார் தலைமை காவல்துறை இயக்குநர் குப்தேஸ்வர் பாண்டே தனது ட்விட்டர் பதிவில், வழக்கு விசாரணைக்கு மும்பை சென்ற ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரியை கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தியுள்ளனர் என்று அந்த அதிகாரின் கையில் தனிமைப்படுத்தல் முத்திரை குத்தப்பட்ட புகைப்படத்துடன் அவர் பதிவேற்றியுள்ளார். அதில் ஆக.15ம் தேதி வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரியின் கையில் ஆக.15ம் தேதி வரை தனிமைப்படுத்தலுக்கான முத்திரை குத்தப்பட்ட புகைப்படம்
அவருக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் தங்குமிடத்தில் தங்குவதற்கு விண்ணப்பித்திருந்த போதிலும், அங்கு தங்குமிடம் வழங்கப்படவில்லை. தொடர்ந்து, கோரேகானில் ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
மும்பை விமான நிலையம் வந்தடைந்த போலீஸ் அதிகாரி வினய் திவாரி, உள்நாட்டு விமானப் பயணிகள் தனிமைப்படுத்தப்படும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு மும்பை பாஜக தலைவர் வினோத் மிஸ்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதுதொடர்பான பதிவில், ஒட்டுமொத்த நாடும், சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி அறியப்பட வேண்டும் என நினைக்கும் நிலையில், பீகார் போலீசார் அண்மை காலமாக விசாரணைக்காக மகாராஷ்டிரா வருகை தந்து வருகின்றனர்.
ஆனால் அவர்களுக்கு நீங்கள் ஏன் ஆதரவு வழங்க மறுக்கிறீர்கள் என மகாராஷ்டிரா முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதுதொடர்பாக விசாரணைக்கு வந்த ஐபிஎஸ் அதிகாரி வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
(With inputs from ANI and PTI)