ஆந்திராவில் சக மாணவனுடன் தொடர்பு வைத்திருந்ததை விரும்பாத தந்தை தன் மகளை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கா ரெட்டி. இவரது மகள் வைஷ்ணவி சக மாணவனுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தந்தை வெங்கா ரெட்டிக்கு பிடிக்கவில்லை.
இது சம்பந்தமாக மகளை பலமுறை அவர் எச்சரிக்கை செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கொல்லப்பட்ட நிலையில் வைஷ்ணவியின் உடல் அவரது வீட்டில் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக தந்தை வெங்கா ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து என்.டி.டி.வி.-க்கு போலீஸ் அதிகாரிகள் அளித்த தகவலில், '' காதலனுடன் தொடர்பில் இருந்ததால் வைஷ்ணவியை வெங்கா ரெட்டி கண்டித்துள்ளார். இதுசம்பந்தமாக இருவருக்கும் இடையே பலமுறை மோதல் ஏற்பட்டிருக்கிறது. வைஷ்ணவி எப்படி கொல்லப்பட்டார் என்பது தெரியவில்லை. மர்மமாகத்தான் உள்ளது. தடயவியல் சோதனை வெளிவந்த பின்னரே உண்மை தெரியும்'' என்றனர்.
வைஷ்ணவியுடன் டேட்டிங் செய்த இளைஞர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவரைப்பார்க்க கூடாது என்று வைஷ்ணவியை தந்தை வெங்கா ரெட்டி கட்டாயப்படுத்தியுள்ளார். இதனை அவர் மீறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.