அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த சான் அண்டோனியோ நீர் வாழ் உயிரினங்கள் காட்சி சாலையில் இருந்த சுறா மீனை கொள்ளையர்கள் கடத்தி சென்றுள்ளனர்.
ஹெலன் எனப் பெயர் கொண்ட 16 இன்ச் சுறா மீனை, மூன்று நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். கடந்த ஜூலை 28 ஆம் தேதி, காட்சி சாலைக்கு வந்த இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். சுறா மீன் கண்கானிப்பாளர் விருந்தினரை கவனிக்க சென்ற போது, இந்த கொள்ளை சம்பவம் நடைப்பெற்றுள்ளது என்று காட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுறா மீனை கடத்துவதற்கு தேவையான வலை, துணிப்பை ஆகியவற்றை கொள்ளையர்கள் எடுத்து வந்துள்ளனர். சுறா மீனை கடத்தி செல்லும் வீடியோ, காட்சி சாலையின் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. முகநூலில் பகிரப்பட்ட இந்த நூதன கொள்ளைக் காட்சியை, 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுள்ளனர்.
இதனை அடுத்து, சான் அண்டோனியோ காட்சி சாலை அதிகாரிகள் காவல் துறையில் புகார் அளித்தனர். “கொள்ளையர்களிடம் இருந்த சுறா மீன் காயமில்லாமல் மீட்கப்பட்டது. அச்சத்தில் உள்ள சுறா, இயல்பு நிலைக்கு திரும்பி வருவதற்கான நடவடிக்கைகளில் பராமரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று லியான் வேலி காவல் துறை அதிகாரி ஜோ தெரிவித்தார். கொள்ளையர்களை கைது செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.