T.R.Baalu on Kashmir issue - காஷ்மீரில் (Kashmir) கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரவு 370 (Article 370) ரத்து செய்யப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருக்கும் முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 3 முன்னாள் முதல்வர்களும் அடங்குவார்கள். இது குறித்து நாடாளுமன்றத்தில் கறாரான கேள்விகளை எழுப்பியுள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு (T.R.Baalu).
“இந்த அவை அனைவருக்கும் சொந்தம் என்று மாண்புமிகு சபாநாயகர் ஓம் பிர்லா சொல்கிறார். அப்படியென்றால், அவர் மறைமுகமாக ஆளுங்கட்சிக்கு ஒரு கேள்வியை முன் வைக்கிறார். காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லாவிற்கு என்ன ஆனது?
இந்த அவை எல்லோருக்கும் சொந்தம் என்றால், அவர் முதலில் நாடாளுமன்ற அவையில் வந்த விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டும். சட்டப் பிரிவு 370 குறித்த விவாதத்திலும் அவர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட வேண்டும். ஆனால், இப்போது அவர் கைது செய்யப்படு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரின் கைது சட்டப்பூரவமாக நடைபெற்றதா. இல்லை… அவர் சட்டத்துக்கு எதிரான வகையில் கைது செய்யப்பட்டுள்ளார்,” என்று டி.ஆர்.பாலு லோக்சபாவில் உரையாற்றியதும் ஆளுங்கட்சித் தரப்பினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் தொடர்ந்து பேசிய பாலு, “மெஹ்பூபா முப்டியும் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு பெண். காஷ்மீரின் முன்னாள் முதல்வர். மெஹ்பூபாவின் மகள், ‘என் அம்மா, வலுக்கட்டாயமாக கையாளப்பட்டார்' என்று ஊடகங்களிடம் புகார் தெரிவித்துள்ளார். இது ஜனநாயகமா… இதையெல்லாம் நாம் பார்க்க வேண்டுமா… ஆளுங்கட்சியிடம் இது குறித்து நான் முறையிடவில்லை. சபாநாயகர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்களிடம்தான் நான் கேள்வி எழுப்புவேன்,” என்ற கோரிக்கையுடன் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.