open defecation-free - "நீங்கள் (PM Modi) வட இந்தியா மாநிலங்களில் காலை நேரத்தில் ரயில் மூலம் பயணம் செய்து உண்மை நிலையைப் பார்க்க வேண்டும்"
New Delhi: சிபிஐ கட்சியைச் சேர்ந்த எம்.பி., பினாய் விசுவம், நாட்டில் திறந்தவெளி மலம் கழித்தல் (Open Defecation) பற்றித் தெரிந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) வட இந்தியாவில் பயணம் செய்து பார்க்க வேண்டும் என்று கூறி அதிரவைத்துள்ளார். சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் 2 சிறுவர்கள் திறந்தவெளியில் மலம் கழித்ததற்காக அடித்துக் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்துதான், பிரதமர் மோடிக்கு எம்.பி., விசுவம் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், “அக்டோபர் 2 ஆம் தேதி, இந்தியாவில் திறந்தவெளி மலம் கழித்தல் ஒழிக்கப்பட்டுவிட்டதாக நீங்கள் உரையாற்றுவீர்கள். நீங்கள் வட இந்தியா மாநிலங்களில் காலை நேரத்தில் ரயில் மூலம் பயணம் செய்து அது உண்மையா என்று பார்க்க வேண்டும். உண்மை நிலை வேறாக இருக்கையில், வெறுமனே அறிவிப்பு வெளியிடுவதில் என்ன பயன் இருக்கிறது.
அதேபோல மத்திய பிரதேசத்தில் கொல்லப்பட்ட 2 குழந்தைகள் குறித்து விசாரணை செய்ய வேண்டும். அது குறித்தும் நீங்கள் உங்கள் உரையில் பேச வேண்டும்.
தலித் சிறுவர்கள் வேறு வழியில்லாமல் திறந்தவெளியில் மலம் கழித்ததற்காக கொல்லப்படுவதை நம் அரசு கட்டமைப்பால் தடுக்க முடியவில்லை. அந்த குழந்தைகளை இழந்து வாடும் குடும்பங்களின் மீது உங்களுக்கு சிறிதளவேனும் அக்கறை இருந்தால், உங்கள் உரையின் கடைசியிலாவது அவர்களைப் பற்றிப் பேசுங்கள்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிவ்புரி மாவட்டத்தின் பாவ்கேதி கிராமத்தில், 10 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள், திறந்தவெளியில் மலம் கழித்ததற்காக அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.