This Article is From Sep 07, 2019

ரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிப்பு: கனிமொழி தலைமையில் திமுகவினர் போராட்டம்!

ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை என்றும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும் என ரயில்வே வாரியம் அறிவித்திருந்தது.

ரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிப்பு: கனிமொழி தலைமையில் திமுகவினர் போராட்டம்!

ரயில்வே துறையால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுவதைக் கண்டித்து சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் கனிமொழி தலைமையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுது

மத்திய அரசு நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் 'துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை' என்றும், 'ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும்' என்றும், ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. 

நூறு சதவீதம் 'அப்ஜெக்டிவ்' கேள்விகள் அடங்கிய இந்தத் தேர்வினை மாநில மொழிகளில் நடத்த வேண்டுமா என்று தெற்கு மத்திய ரயில்வே எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ள ரயில்வே வாரியம், 'இந்தத் தேர்வின் கேள்வித்தாள்கள் மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என்று எந்த உரிமையும் கோர முடியாது' என அறிவித்துள்ளது. 

தபால் துறையில் ஏற்கனவே இதுபோன்ற துறைத் தேர்வுகளை மாநிலமொழிகளில் நடத்த முடியாது என்று முதலில் கூறி, பிறகு திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. அப்போது மத்திய அரசு, 'தபால் துறை தேர்வுகள் இனிமேல் தமிழில் நடத்தப்படும்' என்று உயர்நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்து, அதன் அடிப்படையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

தபால் துறையின் தேர்வுகளை தமிழில் நடத்த முடியும் என்கிற போது, ரயில்வே துறையில் உள்ள தேர்வுகளை ஏன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த முடியாது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தியை வளர்க்கும் விதமாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் சென்னை தெற்கு ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

.