சென்னையில் உள்ள நும்பாக்கத்தில், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிரபல நடிகர் ஷாம் உள்பட 12 பேர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அந்த நடிகருக்கு சொந்தமான பிளாட்டில் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட டோக்கன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். தற்போது நிலவும் இந்த ஊரடங்கு காலத்தில் பல பிரபல தமிழ் நடிகர்கள் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. வேறு எந்த நடிகர்களும் கைது செய்யப்பட்டார்களா என்பது குறித்து இன்னும் தகவல்கள் தெளிவாகத் தெரியவில்லை.
தற்போது வெளியாகி இருக்கும் ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவலின்படி, அண்மையில் பெரிய நடிகர் ஒருவர் இங்கு நடந்த சூதாட்டத்தில் பெரிய தொகையை இழந்த நிலையில், அவர் போலீசாரிடம் இது குறித்து துப்புக்கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நடிகர் ஷாம் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சூதாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட டோக்கன்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் NDTV-யிடம் தெரிவித்துள்ளார்.
இணையதள விளையாட்டின் மூலம் பணத்தை இழந்த இறுதி ஆண்டு இளங்கலை பட்டதாரி தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்ட அடுத்த நாளே போலீசார் இது போன்ற ஒரு சூதாட்ட நிகழ்வை கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பட்டதாரி 20,000 ரூபாயை தான் வேலை செய்துவந்த இடத்தில் இருந்து எடுத்துவந்து, இணையதள விளையாட்டில் இழந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் NDTV-யிடம் தெரிவித்துள்ளார்.
அண்மையில், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, இணையதள கேமிங்கை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உள்ள சட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்தது. மேலும் இளைஞர்கள் ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையாவதால் அவர்களின் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவதாகவும் தெரிவித்தது.