This Article is From Oct 10, 2019

அக்டோபர் 25 முதல் Strike - எச்சரிக்கும் தமிழக அரசு Doctors..! - பின்னணி என்ன?

Doctors Strike - தமிழகத்தில் சுமார் 18,000 அரசு மருத்துவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Doctors Strike - 25 ஆம் தேதி முதல் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

Chennai:

தமிழக அரசின் (TN Government) கீழ் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் (Government Doctors), ஊதிய உயர்வு கொடுக்கப்படவில்லை என்றால், வரும் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை (Strike) ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசிற்குக் கீழ் பணியாற்றும் மருத்துவர்களுக்கு இணையாக, தங்களுக்கும் ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

25 ஆம் தேதி முதல் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் அவசரக் கூட்டத்தை நடத்திய பிறகு, அரசு மருத்துவர்கள் சங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. 24 ஆம் தேதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், 25 ஆம் தேதி முதல் அவசர சேவைகளை மட்டுமே பார்க்க முடியும் என்றும் தமிழக அரசை மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். 

மருத்துவர்கள் தரப்பு, மத்திய அரசிற்குக் கீழ் பணியாற்றும் ஒரு மருத்துவர் 13 ஆண்டுகள் சேவையாற்றிய பின்னர் மாதத்திற்கு 1.2 லட்ச ரூபாய் ஈட்ட முடியும் என்றும், தமிழக அரசிற்குக் கீழ் பணியாற்றும் மருத்துவருக்கோ அதேயளவு ஊதியத்தைப் பெற 20 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்றும் கூறுகின்றனர். இந்த ஊதிய ஏற்றத் தாழ்வு நீக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். 

“எங்கள் கோரிக்கையை தமிழக அரசு 2 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொண்டது. ஆனால், இதுவரை கோரிக்கையை அவர்கள் செயல்படுத்தவில்லை. சமீபத்தில் கூட தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கேட்டுக் கொண்டதன் பேரில் 6 வாரங்களுக்கு நாங்கள் அமைதி காத்தோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று மருத்துவ சங்க மாநிலத் தலைவர் டாக்டர் பி பாலகிருஷ்ணன் NDTV-யிடம் கூறுகிறார். 

தமிழகத்தில் சுமார் 18,000 அரசு மருத்துவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஊதிய மாற்றம் செய்யப்பட்டால் அதன் மூலம் 3,000 மருத்துவர்கள் உடனடியாக பயன்பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. 

இந்த விவகாரம் குறித்து இதுவரை மாநில அரசு, எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

 
 

.