This Article is From Nov 10, 2018

ஜனவரியில் துவங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்!

ராமசாமி படையாட்சியார் உருவப்படம் சட்டப் பேரவையில் திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்

ஜனவரியில் துவங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்!

தமிழக சட்டப்பேரவையின் 5வது கூட்டத்தொடர் வரும் ஜனவரி முதல் வாரத்தில் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக தமிழக சட்டபேரவை கடந்த மே 29ம் தேதி தொடங்கி, ஜூலை 9ம் தேதியுடன் முடிவடைந்தது. இதன்பின்னர் தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கூட்டத்தொடர் முடிவடைந்து 6 மாதங்கள் நிறைவடைவதற்குள் அடுத்த பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது விதி. இதனால், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.

ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ள ஆண்டின் முதல் கூட்டத்தொடர், 5 நாட்கள் நடைபெற உள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இந்த கூட்டத்தொடரில் இரங்கல் தெரிவிக்கப்படும்.

18 எம்.எல்.ஏக்கள் நீக்கம் செல்லும் என்று மூன்றாவது நீதிபதி தீர்ப்பு அளித்துள்ள நிலையில், அவர்களது தொகுதிகள் காலியாகும் என விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், பேரவை கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், ராமசாமி படையாட்சியார் உருவப்படம் சட்டப் பேரவையில் திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்படி, வரும் பேரவைக் கூட்டத் தொடரின் போது ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் திறக்கப்படும் என தெரிகிறது.

.