சென்னையில் மக்கள் தொகை அதிக எண்ணிக்கையில் இருப்பதால்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக மக்களுக்கு உரையாற்றினார். அதில் கொரோனாவை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
முதல்வர் கூறியதாவது-
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைபெற சென்னையில் 4000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயாராக உள்ளது. மண்டலம் வாரியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலை சிறப்பாக கையாள்வதில் தமிழகம் சிறந்த மாநிலமாக செயல்படுகிறது. .
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மக்களும் கவனத்துடன் இருக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் 4 முறை ஆலோசனை நடத்தியுள்ளேன்.
கொரோனா தடுப்பு பணிக்காக 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், அவர்களுக்கு உதவ 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தடுப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் தினமும் 3 முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
அதிகமான மக்கள் நிறைந்த நகரம் சென்னை என்பதால் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது. பொதுக்கழிப்பிடங்களை அதிகமாக பயன்படுத்துவதாலும் தொற்று ஏற்படுகிறது. தமிழகத்தின் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய குழு பாராட்டியுள்ளது. மக்கள் நெருக்கமே சென்னையில் கொரோனா வேகமாகப் பரவக் காரணமாகும்.
வெளி மாநில தொழிலாளர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகள் நடக்கின்றன. நாள் தோறும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
வெளியில் சென்றால் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். பொதுமக்களுக்கு ஜூன் மாதமும் ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும்
இவ்வாறு தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.