தமிழகத்தில் இன்று புதிதாக 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 9,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 66 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் 0.68 சதவீதமாக இருக்கிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் இறப்பு விகிதம் மிகக்குறைவாக உள்ளது. சென்னையில் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையில் பரிசோதனை நடத்தினால் மட்டுமே எங்கு கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். எனவே, பாதிப்பு அதிகமாகுவதை எண்ணி மக்கள் அச்சப்பட வேண்டாம்.
இதுவரை 2.91 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் 11,956 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோன பரிசோதனை செய்யும் ஆய்வகங்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 38 அரசு, 20 தனியார் ஆய்வகங்கள் செயல்படுகின்றன.
இன்று 64 பேர் உள்பட மொத்தம் 2,240 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிவகங்கையில் கடந்த 23 நாட்களாக பாதிப்பு இல்லாமல் இருந்தது. இன்று மகாராஷ்டிராவில் இருந்து சிவகங்கைக்கு வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லையிலும் மகாராஷ்டிராவில் இருந்து வந்த 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
நமக்கு கொரோனா வைரஸ் மட்டும்தான் எதிரி. அதனால் பாதிக்கப்பட்டவர்களை எதிரியாக அரசும் கருதாது. மற்ற யாரும் கருத வேண்டாம். பாதிக்கப்பட்டவரை மீட்டெடுப்பதற்காக மட்டுமே முயற்சி செய்ய வேண்டும்.