மு.க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் அசையும் அசையா என ரூ. 40 கோடி மதிப்பிலான 25 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நிலம், கட்டிடங்கள் உள்ளிட்ட ரூ. 40.34 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத முறையில் கிரானைட் சுரங்கம் நடத்தியது தொடர்பான வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அளித்த தகவலின்படி சட்டவிரோதமாக சுரங்கத்தை நடத்திய புகாரின்பேரில் பங்குதாரர்கள் எஸ். நாகராஜன், தயாநிதி அழகிரி ஆகியோர் மீது கிரிமினல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது அமலாக்கத்துறை.
மதுரையில் செயல்பட்டு வரும் ஒலிம்பஸ் கிரானைட்ஸ், அதன் இயக்குனர்கள், பங்குதாரர்கள் மீது தமிழ்நாடு போலீஸ் எஃப்.ஐ.ஆர். மற்றும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
போலீஸ் தனது குற்றப்பத்திரிகையில் ஒலிம்பஸ் கிரானைட்ஸ் மீது இந்திய தண்டனை சட்டம், வெடிமருந்து சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.