This Article is From Nov 01, 2019

தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ்!!

அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் கடந்த 8 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று வேலை நிறுத்தத்தை மருத்துவர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ்!!

அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் மருத்துவ சேவை பாதிப்பு அடைந்திருந்தது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் நடத்திவந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கூட்டமைப்பின் தலைவர் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை உயர்த்த வேண்டும், மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு, காலமுறை ஊதிய உயர்வு வழங்குதல், பதவி உயர்வு ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சென்னையில், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டம் நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நீடித்ததால், நோயாளிகள் பாதிப்பு அடைந்தனர். 

இதையடுத்து மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது. இதன்பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

இதற்கிடையே வியாழக்கிழமைக்குள் பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் விஜய பாஸ்கர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கை சற்று நீட்டிக்கப்பட்டு மருத்துவர்களுக்கு மதியம் 2 மணி வரைக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று மருத்துவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். 

.