This Article is From Apr 24, 2020

சென்னை, மதுரை, கோவையில் முழு ஊரடங்கு! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம், காவல், வருவாய் (ம) பேரிடர் மேலாண்மை, மின்சாரம், ஆவின், உள்ளாட்சிகள், குடிநீர் வழங்கல் துறைகளும் தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.

சென்னை, மதுரை, கோவையில் முழு ஊரடங்கு! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

ஞாயிறு முதல் புதன்வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளில் ஞாயிறு முதல் அடுத்த அடுத்த 3 நாட்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளிலும் ஊரடங்கு முழுமையாக 26.4.2020 காலை 6 மணி முதல் 29.4.2020 இரவு 9 மணி வரை அமல் படுத்தப்படும்.

சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் ஊரடங்கு முழுமையாக 26.4.2020 காலை 6 மணி முதல் 28.4.2020 இரவு 9 மணி வரை அமல் படுத்தப்படும். 

மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம், காவல், வருவாய் (ம) பேரிடர் மேலாண்மை, மின்சாரம், ஆவின், உள்ளாட்சிகள், குடிநீர் வழங்கல் துறைகளும் தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.

இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33% பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

மேற்குறிப்பிட்ட மாநகராட்சிகள் தவிர பிற இடங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள்/அனுமதிகள் தொடரும். இக்காலத்தில் நோய்த்தடுப்பு பகுதிகள் (Containment Zones) கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.

இப்பகுதிகளில் தினந்தோறும் இருமுறை கிருமிநாசினி தெளிக்கப்படும். அம்மா உணவகங்கள், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ATM Center) வழக்கம் போல் செயல்படும். மேற்கண்ட நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதியில்லை.

மேற்கண்ட பணிகள் தவிர, பிற பணிகளுக்கு முழுயான தடை விதிக்கப்படுகிறது. இதர அரசு அலுவலகங்கள் (பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட) செயல்படாது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம். பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது.

இவ்வாறு தமிழக முதல்வர் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.

.