This Article is From Mar 18, 2019

பொள்ளாச்சி விவகாரம் : கோவை நீதிபதியின் முன்னிலையில் திருநாவுக்கரசு ஆஜர்

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விட்டது. இருப்பினும் அதனை சிபிஐ இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் திருநாவுக்கரசு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Pollachi, Tamil Nadu:

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசை கோவை மாவட்ட குற்றவியல் நீதிபதி முன்னிலையில் இன்று ஆஜர் படுத்தினர். பின்னர் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

திருநாவுக்கரசுவிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து என்.டி.டி.வி.யிடம் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது-

திருநாவுக்கரசை விசாரித்ததில் பல தகவல்களை நாங்கள் திரட்டியுள்ளோம். இவை அனைத்தும் கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் போன் உள்ளிட்ட கருவிகளிடம் இருந்தும், திருநாவுக்கரசு வீட்டில் எடுக்கப்பட்ட சாதனங்களில் இருந்தும் எடுக்கப்பட்டன. இவை இந்த வழக்குக்கு வலுவான ஆதாரங்களாக இருக்கும். வெகு விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளோம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். முன்னதாக திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு விட்டது. இருப்பினும், இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் திருநாவுக்கரசு முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். 26 வயதாகும் அவர், எம்.பி.ஏ. படித்து சொந்தமாக பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கல்லூரி மாணவர்களுடன் தொடர்பு வைத்து அவர்கள் மூலம் இளம் பெண்களை பாலியல் ஆசைக்கு பயன்படுத்தி, அவற்றை வீடியோவாக திருநாவுக்கரசு எடுத்து வைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

இதன் மூலம் சம்பந்தப்பட்ட பெண்களை பணம் கேட்டு மிரட்டவும், மீண்டும் பாலியல் உறவுக்கு இணங்கவும் திருநாவுக்கரசு கும்பல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியான திமுக ஆளுங்கட்சியான அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை போலீஸ் அதிகாரி பாண்டியராஜன் வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

வழக்கை சிபிஐக்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் பாதிக்கப்பட்டவரின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதனை கண்டித்த சென்னை உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 25 லட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது. 

.